தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் திடீரென ஆக்சிஜன் கொள்கலனிலிருந்து வாயு கசிந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் கொள்கலனில் இருந்து திடீரென ஆக்சிஜன் வாயு கசியத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதி வெண்புகை மண்டலமாகக் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆக்சிஜன் வாயு கசிந்து தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் பிராணவாயு சேகரிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டு 24 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.