கரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரத்தில் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது:
"தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால், 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
இந்த வயதுடையவர்களுக்கு 2.75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்படுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, பொது முடக்கம் குறித்து பேசிய அவர், "மகாராஷ்டிரத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் நாளை முடிவெடுக்கப்படும்" என்றார்.