திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஜனாதிபதிய சம்ரக்சனா சமிதியின் தலைவருமான கே.ஆர். கௌரி அம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 101.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌரி அம்மாளை, சமீபத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
கேரள மாநில அரசியல் வரலாறில் மிக முக்கிய இடம் வகிக்கும் கௌரி அம்மாள், மாநிலத்தில் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
கேரள சட்டப்பேரவைக்கு 10 முறை தேர்வு செய்யப்பட்டு, சுமார் 16 ஆண்டுகள், 6 பல்வேறு ஆட்சியர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். கேரள அமைச்சரவையில் வருவாய், தொழில்துறை, உணவு மற்றும் வேளாண்துறை உள்ளிட்ட பல முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை கௌரி அம்மாள் வகித்துள்ளார்.
1919ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஆலப்புழாவின் பத்தனக்காடு கிராமத்தில் கே.ஏ. ராமன் - பார்வதி அம்மா தம்பதிக்கு 7வது மகளாகப் பிறந்த கௌரி அம்மாள், இளநிலைப் பட்டப்படிப்புடன் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.