நம் நாட்டில் மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதன் அவசியம் என்ன என்று மத்திய அரசுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதனால் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தில்லி 1.34 கோடி டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது. இதில் 92,840 டோஸ் கோவாக்சின், 2,67,690 டோஸ் கோவிஷீல்டு மட்டுமே வந்துள்ளன. தடுப்பூசி நிறுவனங்கள் இதுகுறித்து சரியாக பதில் அளிக்க மறுக்கின்றன.
தில்லி அரசு 5.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மட்டுமே கேட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், மே மாதத்தில் மட்டும் 1.34 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி கேட்டதற்கு ஆர்டர் நகல் உள்ளது. இதில், 3.5 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் பெறப்பட்டுள்ளது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.
மேலும், தடுப்பூசி ஆர்டர் செய்த கடிதத்தை ஊடகங்களிடம் காட்டிய அவர், மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கண்டனம் தெரிவித்தகர்.
மாநிலங்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை குறைத்து வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் விற்கப்படுகின்றன. நம்முடைய நாட்டில் மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல, கரோனா மூன்றாவது அலையை தடுக்க வேண்டுமெனில் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.