பிகாரில் கரோனா விதிகளை மீறியதாக ஜன் ஆதிகர் கட்சித் தலைவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பப்பு யாதவை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், பாட்னா மாவட்டத்தில் ஜன் ஆதிகர் கட்சி தலைவர் பப்பு யாதவ், கரோனா விதிகளை மீறி தமது தொண்டர்கள் ஒரு சிலருடன் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.
காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி வெளியே நடமாடியதால், காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
பப்பு யாதவ் அனுமதியின்றி வெளியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததாகவும், அதனால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கில் தவித்து வரும் மக்களுக்கு உதவுவதற்கே வெளியில் தமது தொண்டர்களுடன் நடமாடியதாக பப்பு யாதவ் விளக்கமளித்துள்ளார்.