ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி ஒன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதுடன், அதிலிருந்து 19 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனால் அந்த எல்லையோர மாவட்டத்தில் அமைதியை சீா்குலைக்கும் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் மற்றும் காவல்துறையினா் அடங்கிய குழு சுரன்கோட் என்ற இடத்திலுள்ள பாக்லா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, வெளித்தெரியாத வகையில் இருந்த பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி ஒன்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து 19 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை’ என்றாா்.
ஜம்மு பகுதியில் சமீப நாள்களில் வெடிப்பொருள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த சனிக்கிழமை தோடா மாவட்டத்தின் சக்கரன்டி கிராமத்தில் 40 கிலோ வெடிபொருள், ஒரு குக்கா் வெடிகுண்டு, அத்துடன் வெடிகுண்டு செய்வதற்கான பல்வேறு பொருள்கள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.