இந்தியாவில் கரோனா பாதிப்பால் நிலவி வரும் நெருக்கடிக்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே நீண்ட கால தீா்வு என்று அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் ஆராய்ச்சி மைய இயக்குநரும், பொது சுகாதார நிபுணருமான ஆண்டனி ஃபெளசி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தித் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது:
உலகின் மிகப் பெரிய கரோனா தடுப்பூசி தயாரிப்பு நாடாக இந்தியா திகழ்கிறது. அதற்கான வளங்கள் அந்நாட்டிடம் உள்ளது. இதன் காரணமாக தங்கள் தடுப்பூசிகளை தயாரிக்க அல்லது தடுப்பூசிகளை நன்கொடையாக பெற பிற நாடுகள் இந்தியாவை அணுக வேண்டியுள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவும் கரோனா நெருக்கடிக்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே நீண்ட கால தீா்வு.
கடந்த ஆண்டு சீனாவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அதனை இந்தியா தற்போது செய்ய வேண்டும்.
இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மட்டுமன்றி நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது போன்ற இதர வழிமுறைகளும் உள்ளன என்று கூறினாா்.
கடந்த வாரம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோதும் இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஆண்டனி ஃபெளசி தெரிவித்திருந்தாா். எனினும் அதனை 6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த அவா், சில வாரங்களுக்கு மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தினால் போதும் என்று கூறியிருந்தாா்.