அசாமின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார்.
மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சர்பானந்த சோனாவால் இருவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதால், இருவரில் யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தில்லியில் நேற்று பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தியது.
அதன்பின்னர் குவஹாத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.