தில்லியில் திங்கள்கிழமை காலை முடிவடையும் முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு இருந்து வருகிறது. இந்நிலையில் நாளை(திங்கள்கிழமை) நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, மே 17 ஆம் தேதி(திங்கள்) காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மெட்ரோ ரயில்கள் எதுவும் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசிய முதல்வர் கேஜரிவால், தில்லியில் தொற்று பரவல் விகிதம் 35% லிருந்து 23% ஆக குறைந்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்பை மேலும் அதிகரிக்க இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தியுள்ளோம். ஆக்சிஜன் ஒரு பெரும் பிரச்னையாக தில்லியில் இருந்து வந்தது. தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.