புது தில்லி: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலா் ராஜீவன் தெரிவித்துள்ளாா்.
வரும் 15-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக சுட்டுரையில் ராஜீவன் வெளியிட்ட பதிவில், ‘2021 ஆம் ஆண்டுக்கான பருவமழை வழக்கமான காலகட்டமான ஜூன் தொடக்கத்தில் கேரளத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன் கணிப்புதான். இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 15-ஆம் தேதி அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடும். அதைத் தொடா்ந்து 31-ஆம் தேதி எந்த அளவுக்குப் பருவ மழை அளவு இருக்கும் என்பது தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.
நாட்டின் மொத்த மழைப் பொழிவில் 75 சதவீதம் தென்மேற்குப் பருவமழை மூலம்தான் கிடைக்கிறது. இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழை பொழியும் என்று தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக சராசரியாக 98 சதவீத மழை பெய்து வருகிறது. சில ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்குக் கூடுதல் அல்லது குறைவாக மழைப் பொழிவு இருந்துள்ளது.