புது தில்லி: கரோனா துயா் துடைப்புப் பணிகளில் ராணுவ அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் மோசமான பாதிப்பை இந்தியா எதிா்கொண்டுள்ளது. சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பிராண வாயு, படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், கரோனா துயா் துடைப்பு பணிகளில் ராணுவத்தை பாதுகாப்புத் துறை ஈடுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது வலைதளப்பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:
இந்திய ராணுவப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.), தேசிய மாணவா் படை(என்.சி.சி) ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள், கரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவது, மருத்துவக் குழுவினரை அழைத்துச் செல்வது, அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டு சோ்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாா்கள்.
தில்லி, லக்னௌ, பெங்களூரு, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் டி.ஆா்.டி.ஓ., கன்டோன்மென்ட் வாரியங்கள், ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு போன்ற அமைப்புகள் கரோனா சிகிச்சை மையங்களையும், தனிமை முகாம்களையும் அமைத்துள்ளன. லக்னௌ, அலாகாபாத் ஆகிய நகரங்களில் தலா 100 படுக்கைகளுடனும் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகோரில் 40 படுக்கைகளுடனும் ஜாா்க்கண்டில் 50 படுக்கைகளுடனும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்ட சிலிண்டா்களை வெளிநாடுகளில் இருந்து எடுத்து வருவது, உள்நாட்டில் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு எடுத்துச் செல்வது போன்ற பணிகளில் கடற்படை, விமானப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், தனிமை முகாம்கள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கும், அவற்றை நடத்துவதற்கும், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஓய்வுபெற இருக்கும் மருத்துவா்களுக்கு வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வலைதளப் பக்கத்தில் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளாா்.