புது தில்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இனி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களை இணையதளம் மூலமாக வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் விவகாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:
அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் யுடிஐடி- செயலியைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழை இணையதளம் மூலமாக வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையால், குறிப்பாக கரோனா தொற்று நெருக்கடியின்போது, மாற்றுத்திறனாளிகள் எளிதாக தங்களது சான்றிதழ்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது.
உடற்குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மிகவும் அவசியமாகும். இந்தச் சான்றிதழை வழங்குவதன் மூலமாகவே பல்வேறு அரசு நலத்திட்டங்களின் நன்மைகளை அவா்களால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.