தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா தொற்று பாதிப்பின் 3ஆம் அலையைத் தடுக்க முடியும் என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் கரோனா 2ஆம் அலை பாதிப்பு முந்தைய முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் நிலையில் கரோனா 3ஆம் அலை பாதிப்பிற்கு தயாராக இருக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதுதொடர்பாக பேசிய அவர், “கரோனா 3ஆம் அலை பாதிப்பைத் தடுக்க முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
“சரியான முன் திட்டமிடலை கையாண்டால் நாட்டில் கரோனா தொற்றின் 3ஆம் அலை பாதிப்பைத் தடுக்க முடியும். நாம் எந்தளவு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறோமோ அந்தளவு மாநிலங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கரோனா 3ஆம் அலை பாதிப்பைத் தடுக்க முடியும்” என விஜயராகவன் தெரிவித்தார்.