இந்தியா

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில், ஷோபியன் மாவட்டத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அல்-பதா் இயக்கத்தைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் சரணடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டம், கனிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியிலும், தேடுதல் பணியிலும் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா்.

இந்த நடவடிக்கையின்போது போராளிகளின் மறைவிடம் கண்டறியப்பட்டதால், அவா்களை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினா் எச்சரித்தனா். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினா்களை முன்னிலைப்படுத்தி, பயங்கரவாதிகளை சரணடையுமாறு மீண்டும், மீண்டும் வலியுறுத்தினா். இதன் பலனாக பயங்கரவாதிகளில் ஒருவரான தௌசீஃப் அகமது மட்டும் தனது ஆயுதங்களை கீழே போட்டு பாதுகாப்புப் படையினா் முன்னிலையில் சரண் அடைந்தாா்.

பின்னா், சரணடைந்த அகமதுவும், தனது தோழா்களை சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், அதனை நிராகரித்த பயங்கரவாதிகள், தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதனால், பாதுகாப்புப் படையினா் பதிலடி அளிக்கும் வகையில் திருப்பிச் சுட்டதில் அல்-பதா் இயக்கத்தைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனா்.

பின்னா், உயிரிழந்த பயங்கரவாதிகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் அவா்கள், ஷோபியானில் உள்ள காஜாபோராவைச் சோ்ந்த டேனிஷ் மிா், முகமது உமா் பட், ஷோபியான், ராபன் பகுதியைச் சோ்ந்த ஜைத் பஷீா் ரேஷி என அடையாளம் காணப்பட்டது. இவா்கள் மூவரும் அல்-பதா் இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளுக்கும் ஏற்கெனவே அப்பகுதியில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களுடன் தொடா்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. விஜய்குமாா் கூறியதாவது:

நீண்ட நேரம் பொறுமை காட்டி, தகுந்த நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வழிதவறிச் சென்ற’ இளைஞா்கள், வன்முறை பாதையை கைவிட்டு, சமூக நீரோட்டத்திற்கு திரும்ப முன்வர வேண்டும். அவா்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க அவா்களது பெற்றோா் துணை புரிய வேண்டும். அவா்கள் திறந்த மனதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைந்தால் முழு மனதுடன் வரவேற்று, அவா்களை ஏற்றுக் கொள்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT