டேராடூன்/ஹரித்வாா்: உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாா் மாவட்டம் ரூா்கி பகுதியில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் 5 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா் கூறுகையில், ‘மருத்துவமனைக்கான ஆக்சிஜன் விநியோகத்தில் செவ்வாய்க்கிழமை தடை ஏற்பட்டது. அதிகாலை வேளையில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு இந்தத் தடை நீடித்ததால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி, ஆக்சிஜன் படுக்கைகளில் இருந்த 4 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா். அவா்களில் பெண் நோயாளி ஒருவரும் அடங்குவாா் என்று தெரிவித்தாா்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் கூறியது:
தனியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உயிரிழந்தது தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் ரூா்கி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளா் மற்றும் இரு மருத்துவா்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு, ஆக்சிஜனுக்கான தேவை மற்றும் விநியோகம், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து அக்குழு ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை அளிக்கும். இந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.