தில்லியில் கரோனா செயலியில் ஆக்ஸிஜன் இருப்பு குறித்து தவறான தகவல் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைநகரான தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் இருப்பு போன்றவற்றை அறிந்து அவை இருக்கும் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் வகையில் தில்லி அரசு கரோனா செயலியை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இந்த செயலியில் ஆக்ஸிஜன் இருப்பு குறித்து தவறான தகவல் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் ஆயிரம் நாள்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாக செயலியில் விவரங்கள் காட்டப்படுவதாகவும்,
ஆனால் தொடர்புடைய மருத்துவமனையைத் தொடர்புகொள்ளும்போது ஒரு நாளுக்குரிய ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பு உள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் 952 கன மீட்டர் ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அதனை இரவு 11 மணிக்கு மீண்டும் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உரிய வசதிகள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உதவியாக கொண்டுவரப்பட்ட கரோனா செயலியில் தவறான தகவல்கள் வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.