இந்தியா

ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: தில்லி அரசு

6th May 2021 11:52 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

தில்லியில் கடந்த சில நாள்களாக மருத்துவமனைகளில் உயிா்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. தில்லியிலுள்ள மருத்துவமனைகள், படுக்கைகள், ஐசியுக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள், நிலவரம் ஆகியவற்றை அறிய பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், கரோனா சிகிச்சை தொடா்பான மருத்துவமனைகள் மற்ற உதவிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறியும் வகையில் ‘ஒரே உதவி எண்’ உருவாக்கி அதை பிரபலப்படுத்த வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி அரசு அதிகாரிகளுடன் நடத்திய அவசரக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா கூறியிருந்தார். 

 

ADVERTISEMENT

இந்த நிலையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தில்லிக்கு நாளொன்றுக்கு வெறும் 490 டன் என்றில்லாமல் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காமல் இருந்ததற்காகவும்,  ஏப்ரல் 30-ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இணங்காமல் இருந்தமைக்காக ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கரோனா இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தில்லியில் முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சிலா் தங்கள் கஷ்டங்களையும் மறந்துவிட்டு கரோனா நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா்கள். 

இந்நிலையில், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. 
அதாவது வீடு தனிமைப்படுத்தப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் அனைத்து நபர்களும் delhi.gov.in என்ற இணையதளத்தில் செல்லுபடியாகும் ஆதார் எண் உள்ளிட்ட அடையாள அட்டை விவரங்கள் மற்றும் கரோனா சோதனை சான்று உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே தில்லி அரசு அறிமுகப்படுத்திய கரோனா செயலியில், தில்லி மருத்துவமனைகளில் ஆயிரம் நாள்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், ஆனால் தொடர்புடைய மருத்துவமனையைத் தொடர்புகொண்டால்  ஒரு நாளுக்குரிய ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பு உள்ளது தெரியவந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உரிய வசதிகள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உதவியாக கொண்டுவரப்பட்ட கரோனா செயலியில் தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT