காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் ராகுல் காந்தி என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 'இந்தியா எக்கனாமிக் கான்க்ளேவ்' நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச அரசு மீது ராகுல் காந்தியின் விமர்சனங்கள் குறித்து பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி பேசும்போது அவரது சொந்த அறிவைக் கொண்டு பேசவில்லை. கடன் வாங்கிய அறிவைக் கொண்டு பேசுகிறார். எனவே அதில் பகுத்தறிவு இல்லை.
அவர் மாநிலத்திற்கு அரிதாகவே வருகை தருகிறார். அப்படி இருக்க அவருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்,
மேலும், அவர் நாட்டில் தெற்கில் இருக்கும்போது வடக்கையும், வடக்கில் இருக்கும்போது தெற்கையும் விமர்சிக்கிறார். இதனால் அவர் மீது மக்களுக்கு நம்பகத் தன்மை இல்லை.
வயநாடு மற்றும் அமேதியிலிருந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் மோசமாகத் தோற்றார்.
காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே ஒரு காரணமாகி வருகிறார் என்றார்.