பிரதாப்கர்: உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட நால்வர் பலியாகினர்.
இதுதொடர்பாக பிராயக்ராஜ் மாவட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் கவிந்திர பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதாப்கர் மாவட்டம் ஸங்க்ரம்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோகர்பூர் ராம்பூர் தபி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் படேல் என்பவரிடம் இருந்து சனிக்கிழமையன்று ஜவஹர்லால் சரோஜ் , அவரது மனைவி சுனிகா சரோஜ், விஜய் குமார் மற்றும் ராம் பிரசாத் ஆகிய நால்வர் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.
அவர்களது உடல்நிலை மோசமானதையடுத்து ஸங்க்ரம்கர் சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிமை இரவு அவர்கள் நால்வரும் மரணமடைந்தனர். தற்போது அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளளது. பாபுலால் படேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் சகோதரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நவாப்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட நானகு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.