லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேர் மீது ஒரு பெண் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
தற்போது 40 வயது இருக்கும் அந்தப் பெண்மணி, தனது மகன், அவரது தந்தை யார் என்பதை அறிந்து கொள்ள வலியுறுத்துவதால், தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அப்பெண் அளித்தப் புகாரில், கடந்த 1994-ஆம், புகார் அளித்திருக்கும் பெண்ணுக்கு 13 வயது இருக்கும் போது, தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அப்போது, அதேப் பகுதியில் வசித்து வந்த நாகி ஹசன் என்ற நபர், அப்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு, நாகி ஹசனின் சகோதரன் குட்டுவும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சம்பவம் நடந்த போது, அப்பெண்ணின் உறவினர்கள் இது குறித்து புகார் அளிக்க முன் வராததும், அப்பெண் கர்ப்பமடைந்து, ஆண் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை யாருக்கோ தத்துக் கொடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாயும், மகனும் ஒன்றிணைந்த நிலையில், தனது தந்தை குறித்து மகன் தாயிடம் கேட்டுள்ளார். இதனால், தனது மகனுக்காக, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து புகாரளிக்க அப்பெண் முடிவு செய்துள்ளார்.
காவல்நிலையம் வந்து புகார் அளிக்க, அப்பெண்ணின் மகன்தான் ஊக்கப்படுத்தியுள்ளார் என்று கூறிய உறவினர்கள், நாகி ஹசன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மரபணு சோதனை செய்யப்பட வேண்டும் என்று அப்பெண் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்.