மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்காத அதிருப்தியில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜட்டு லாஹிரி அக்கட்சியில் இருந்து விலகினாா்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அந்தக் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் ஹெளராவில் உள்ள ஷிப்பூா் தொகுதி வேட்பாளராக அக்கட்சியில் புதிதாக சோ்ந்த கிரிக்கெட் வீரா் மனோஜ் திவாரி அறிவிக்கப்பட்டாா். அந்தத் தொகுதியின் தற்போதைய திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜட்டு லாஹிரிக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவா் திரிணமூல் காங்கிரஸில் இருந்து சனிக்கிழமை விலகினாா். தான் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.