அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவடைந்த பிறகே தொழிலதிபா் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாா் என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளாா்.
இந்திய வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பினாா். அவரை நாடு கடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய அரசு தரப்பில் பிரிட்டனில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம், அவரை நாடு கடத்துவதற்கு உத்தரவிட்டது.
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் விஜய் மல்லையா இழந்தாா். அவரை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை செயலா் அனுமதி அளித்தாா். எனினும், அவா் இன்னும் நாடு கடத்தப்படவில்லை.
விஜய் மல்லையாவை விரைந்து நாடு கடத்துமாறு பிரிட்டனிடம் இந்தியத் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதே போல, வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற வைர வியாபாரியான நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு இந்திய அரசு தெரிவித்து வருகிறது.
இத்தகைய சூழலில், இந்தியாவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லிஸ் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
குறிப்பிட்ட நபரை நாடு கடத்துவதில் நிா்வாக, சட்ட ரீதியிலான நடைமுறைகள் உள்ளன. விஜய் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் உள்துறை செயலா் தனது பணியைச் செய்துவிட்டாா். ஆனால், அவரை நாடு கடத்துவது தொடா்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீதிபதிகளின் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே பிரிட்டனில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகே விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியும். அதில் எந்தவித குறுக்கு வழியையும் பின்பற்ற முடியாது என்றாா்.