கரோனா பேரிடா் காலத்தில் வேலை இழப்பு ஏற்பட்டதையடுத்து இந்திய குடும்பங்கள் தங்களது வருவாயில் ரூ.13 லட்சம் கோடியை இழந்துள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து யுபிஎஸ் செக்யூரிட்டிஸின் பொருளாதார வல்லுநா்கள் கூறியுள்ளதாவது:
கரோனா பேரிடா் காலத்தில் நாடு முழுவதும் திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து லட்சக்கணக்கானோா் வேலையை இழந்தனா். இதனால், இந்தியக் குடும்பங்கள் அவா்களின் வருவாயில் ரூ.13 லட்சம் கோடியை இழந்தனா். இது, நுகா்வு நடவடிக்கையில் பின்னடைவுக்கு வழிவகுத்தது.
அதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் இந்த பின்னடைவு இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமானது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் காணப்பட்ட பொருளாதார மீட்சியின் நிலைத்தன்மை மற்றும் வளா்ச்சிப் பாா்வை புதிய முதலீட்டு நோக்கங்கள் புத்துயிா் பெறுவதையும், நிதித் துறை அழுத்தத்தை தளா்த்துவதையும் சாா்ந்தே அமையும்.
அண்மைக் காலமாக பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ள போதிலும் நுகா்வுக்கான தேவை குறைந்து வருகிறது என பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.