புது தில்லி: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடும் வழக்கத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாயன்று, தேர்தல் ஆணையத்திடம் பாஜகவின் பல்வேறு தேர்தல் நடத்தை விதி மீறல்தொடர்பான புகார்களை அளித்தது. அதில், கே-வின் வழியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புகார் குறித்து, மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கும் தேர்தல் ஆணையம், இது தொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து மாநில சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளது.
அதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுவதை முற்றிலும் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.