தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி செலவை ஏற்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அறிவித்துள்ளது.
இதேபோன்று இன்போசிஸ், ஆக்செஞ்சர் ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 6 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்தம் 19 லட்சம் பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.