லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், தனது மகளின் தலையை அறுத்துக் கொன்ற தந்தை, தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
ஹர்டோய் மாவட்டம் பண்டேதரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தந்தை சர்வேஷ், தனது மகள் தூரத்து உறவினரான ஆதேஷுடன் நெருங்கியப் பழகுவதைப் பார்த்து ஆத்திரமடைந்து இதுவரையும் கொல்ல முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் மகள் தனியாக இருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தந்தை, கூரான ஆயுதத்தால் மகளின் தலையை அறுத்து தனியாக எடுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் வீட்டில் உடல் இருக்க, தலையை ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்துக்குச் சென்றுள்ளார். சாலையில் தலையுடன் நடந்து சென்று கொண்டிருந்த சர்வஷை தடுத்து நிறுத்திய காவலர்கள், அது யாருடைய தலை என்று கேட்டுள்ளனர். அதற்கு, எந்த பதற்றமும் இல்லாமல், ஐயா, நான் எனது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டேன், என்னை கைது செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக அவரைக் கைது செய்து, தலை மற்றும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.