புது தில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதமாகவே வைத்திருக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) முடிவு செய்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்போது 5 கோடிக்கும் அதிகமான பயனார்கள் உள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இபிஎஃப்ஓ அமைப்பின் அறங்காவலர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை ஸ்ரீநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்புத் தொகைக்கு (2020-21-ஆம் ஆண்டுக்கான தொகை) 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவீதமாகக் குறைத்தது. கரோனா பேரிடர் காலத்தில், ஏராளமானோர் வருங்கால வைப்பு நிதித் தொகையை பெற்றுக் கொண்டதும், குறைவான தொகையே செலுத்தப்பட்டதும் இதற்குக் காரணிகளாக அமைந்தன.
கடந்த 2012- 13-ஆம் ஆண்டியிலிருந்து கணக்கெடுத்தால், இதுதான் மிகக் குறைவான வட்டி விகிதமாகும். இதுவே 2016 - 17-ஆம் நிதியாண்டில் 8.65 சதவீதமும், 2017 - 18-ஆம் நிதியாண்டில் 8.55 சதவீதமும், 2015 - 16-ஆம் நிதியாண்டில் 8.8 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.