புது தில்லி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
தகுதியானவா்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தனது மகளுடன் சென்று ராணுவ மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தாா். வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் , சுகாதார ஊழியா்கள் ஆகியோருக்கு நன்றி என்றும் அந்தப் பதிவில் அவா் தெரிவித்தாா்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாா்ச் 1-இல் தொடங்கின. அப்போது, பிரதமா் மோடி தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலை 6.30 மணிக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அதன் பிறகு குடியரசுத் தலைவா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா் என பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா்.