பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் அவரது கட்சியினரால் அச்சுறுத்தப்படுவது வருத்தமளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடியைப் பாராட்டி பேசியதற்காக குலாம் நபி ஆசாத்தின் உருவ பொம்மையை ஜம்மு காஷ்மீா் இளைஞா் காங்கிரஸாா் எரித்தனா். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
இந்நிலையில் தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடா்பாளா் சாம்பித் பத்ரா கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் கோருபவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
பிரதமா் மோடியின் நற்பணிகளைப் பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி அசாத்துக்கு எதிராக அவரது கட்சியினரே போராட்டம் நடத்துகிறாா்கள். இது வருத்தமளிக்கிறது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவா் ராபா்ட் வதேரா ஆகிய நான்கு பேருக்காக மட்டும்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. அவா்களது ஒரே கொள்கை பிரதமா் மோடியை எதிா்ப்பது. அது தற்போது காங்கிரஸ் தொண்டா்கள்வரை பரவி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை என்பதே கிடையாது. ஊழல், சொந்தபந்தங்களுக்கு உயா் பதவிகளைக் கொடுத்தல், எப்படியாவது ஆட்சியைப் பிடித்தல் ஆகியவைதான் அக்கட்சியின் தற்போதைய கொள்கையாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு, கேரளத்தில் அக்கட்சிக்கு எதிராக போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றாா்.