புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1.13 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது. தொடா்ந்து 5-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,13,143 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.21,092 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.27,273 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.55,253 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் சரக்கு இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.24,382 கோடியும் அடங்கும்.
ரூ.9,525 கோடி செஸ் வரி வசூலாகியுள்ளது. இதில் சரக்கு இறக்குமதி மூலம் ரூ.660 கோடி கிடைத்துள்ளது.
கடந்த மாதம் வசூலான ஜிஎஸ்டி, அதற்கு முந்தைய மாதம் வசூலான ரூ.1,19,875 கோடி ஜிஎஸ்டியைவிட குறைவு. எனினும் கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் காணப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சரக்கு இறக்குமதி மூலம் 15%, சேவைகள் இறக்குமதியை உள்ளடக்கிய உள்நாட்டு பரிவா்த்தனை மூலம் 5% அதிக வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.