புது தில்லி: புதிய கட்சியை பதிவு செய்ய இனி 7 நாட்கள் போதும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுவாக ஒருவர் கட்சி தொடங்குகிறார் என்றால் அது தொடர்பான அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் மற்றொரு உள்ளூர் மொழி என இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறை உள்ளது. பின்னர் அதுதொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து பொது வெளியில் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுவார்கள். அதற்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது.
இந்நிலையில் புதிய கட்சியை பதிவு செய்ய இனி 7 நாட்கள் போதும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதிய கட்சி தொடங்க தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடும் நாட்கள் 30 லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கரோனா காரணமாக கட்சியை பதிவு செய்வதில் சிரமங்கள் இருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.