பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உருவ பொம்மையை எரித்து ஜம்முவில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷநவாஸ் சௌதரி கூறியது:
"குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது. காங்கிரஸ்தான் அவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஆக்கியது. அவர் கட்சிக்குத் திருப்பி பணியாற்ற வேண்டிய நேரத்தில் சொந்த கட்சிக்கு ஆதரவு தராமல் காங்கிரஸை வலுவிழக்கச் செய்கிறார்" என்றார் அவர்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவர் எய்ஜாஸ் சௌதரி கூறியது:
"எங்களது மாநில உரிமையைப் பறித்த பிரதமர் நரேந்திர மோடியை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார். இவரைப் போன்றவர்கள்தான் காங்கிரஸ் வலுவிழப்பதற்குக் காரணமாக உள்ளனர். தனது அரசியல் அனுபவம் மூலம் கட்சியை மீட்டெடுக்க அவர் வழிநடத்த வேண்டுமே தவிர வலுவிழக்கச் செய்யக் கூடாது" என்றார்.
மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்ற குலாம் நபி ஆசாத்தைக் கௌரவிக்கும் விதமாக ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி-23 தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமரைப் பாராட்டும் விதமாக ஆசாத் பேசினார். ஆசாத்தின் இந்தப் பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி-23 தலைவர்களுக்கே ஆசாத்தின் கருத்தில் விருப்பமில்லை எனத் தகவல்கள் வெளியாகின.