கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஓரிரு நாள்களில் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவுள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூரில் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இதுகுறித்து கூறியது:
"பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினேன். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முதன்மையானவர்கள் பட்டியலில் இடம்பெறும் வரை காத்திருக்க முடிவு செய்தோம். அந்த முக்கியமானவர்கள் பட்டியலில் வந்துள்ளதால் நாளை நான் தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளனர்."
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 45 முதல் 59 வயதுக்கிடையே இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.