முதல்வர் பதவிக்கு அவசரப்படவில்லை என்றும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே நோக்கம் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்தது:
"நான் முதல்வர் பதவிக்கு அவசரப்படவில்லை. காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே என்னுடைய நோக்கம். அதற்காக கட்சி என்னை படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு, மூன்று எம்எல்ஏ-க்களின் கருத்துகளைப் பார்த்தேன். காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சித்தராமையா இருக்கிறார். அவர் அதை கவனத்தில் கொள்வார். கர்நாடகத்தில் காங்கிரஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். மற்ற விவகாரங்களை நோக்கி திசை திருப்புவதைக் காட்டிலும் பாஜகவுக்கு எதிராக சண்டையிட வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்கள், தொண்டர்கள், தலைவர்கள் என அனைவரும் பாஜகவைத் தோற்கடிக்க விரும்புகின்றனர்."
கர்நாடக பேரவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான நாள்களே இருக்கும் நிலையில், சித்தராமையாவே கர்நாடகத்தின் எதிர்கால முதல்வர் என காங்கிரஸ் எம்எல்ஏ சமீர் அகமது தெரிவித்திருந்தார். கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இடையே சித்தராமையா ஆதரவு, சிவகுமார் ஆதரவு என பிளவுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற சூழலில் சிவகுமார் இதனைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.