ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் குல்ஷான் லோஹ்ரா. மின்சாரம் தாக்கியதில் இரண்டு கைகளையும் இழந்த இவர், பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் அஞ்சிவரும் நிலையில், இரண்டு கைகளையும் இழந்த குல்ஷான் லோஹ்ரா, பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு இடது தொகையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேற்கு சிங்பம் மாவட்டம் மனோஹர்பூர் பகுதியில் வசித்து வருகிறார் லோஹ்ரா. தடுப்பூசி செலுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்தவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார்.
கரோனாவிலிருந்து என்னை தற்காத்துக் கொள்ள விரும்பினேன். அதற்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் என்பதால், நானே வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்.
கரோனா தடுப்பூசி குறித்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பல கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த லோஹ்ரா விரும்புவதாகவும் கூறுகிறார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சப்படும் மக்களுக்கு, லோஹ்ரா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயம் என்று முன்களப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.