கோவாவில் ஜூலை 30க்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால், கோவாவில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் கோவாவில் உள்ள அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு, சுற்றுலாத் தலங்களை திறக்கவுள்ளதாக முதல்வர் பிரமோத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முதல்வர் பிரமோத் கூறியதாவது,
மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளிலும் நடைபெற்று வருகின்றது. தற்போது வரை மாநிலத்தில் உள்ள 60 சதவீதம் பேர் குறைந்தது முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஜூலை மாதத்திற்குள் 100 சதவீதம் மக்களுக்கும் குறைந்தது முதல் தவணையாவது செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. அனைவரும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய பின்பு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து தலங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாம் அலை வந்தால் அதை சமாளிக்கும் வகையில் மருத்துவக் குழுவும், கட்டமைப்பும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.