18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு இதுவரை இலவசத் தடுப்பூசி வழங்கவில்லை என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையின் படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய தில்லி துணை முதல்வர் சிசோடியா, 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த இதுவரை மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை.
ஆனால் ஜூன் 21-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கிறது.
தில்லிக்கு ஜூலை மாதத்திற்காக 15 லட்சம் தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. தில்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இது போதாது. இந்த எண்ணிக்கையில் தடுப்பூசி ஒதுக்கப்பட்டால் தில்லியிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 15 முதல் 16 மாதங்கள் கூடுதலாக தேவைப்படும் என்று குற்றம் சாட்டினார்.
தில்லிக்கு இதுவரை மத்திய அரசால் 5 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் முதல் 18 - 45 வயதுக்குட்பட்டோருக்காக தில்லி அரசு சுயமாக 1.43 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது.