நாட்டில் திங்கள்கிழமை ஒரே நாளில் 88.09 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், 18 வயதுடையோர் என பல கட்டங்களை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அரசின் சுகாதாரச் செயலர் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை மட்டும் நாடு முழுவதும் 88 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் மத்தியப்பிரதேசத்தில் அதிகப்படியாக 17 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், அதனைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 11 லட்சம் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 7 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், பிகாரில் 5.75 கரோனா தடுப்பூசிகளும், ஹரியாணா மற்றும் குஜராத்தில் 5.15 லட்சம் கரோனா தடுப்பூசிகளும் கடந்த 24 மணி நேரத்தில் போடப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 4.60 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் 3.97 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், மகாராஷ்டிரத்தில் 3.85 லட்சம் கரோனா தடுப்பூசிகளும், அசாமில் 3.68 லட்சம் கரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.