புது தில்லி: கரோனா மூன்றாம் அலை நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
ஐஐடி கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கரோனா மூன்றாம் அலை என்பது, மக்களின் நடத்தை மற்றும் அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும். இரண்டாம் கரோனா அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில், கரோனா மூன்றாம் அலை மூன்று விதத்தில் அமையலாம். கரோனா மூன்றாம் அலையின் காரணமாக, நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம்.
இதையும் படிக்கலாமே.. 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக அரசின் ஆளுநர் உரை - முழு விவரம்
முதல் நிலை: (மீண்டும் பழையபடி மாறுவது) கரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதம் உச்சமடைந்து, ஆனால், இரண்டாம் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
இரண்டாம் நிலை: (தீவிரமடைந்த தொற்றுடன் வழக்கமான நிலை) இந்த கரோனா அலை செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்டு, இரண்டாம் அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
மூன்றாம் நிலை: (கடுமையான கட்டுப்பாடுகளுடன்) நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், கரோனா மூன்றாம் அலை தாமதமாக அக்டோபரில் தொடங்கும். இரண்டாம் அலையை விட பாதிப்புக் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறித்து ஐஐடி கான்பூர் குழுவினர் நடத்திய ஆய்வில், கரோனா இரண்டாம் அலை அனைத்து மாநிலங்களிலும் கடும் தீவிரத்தை அடையும், மிசோரம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.