நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 52,26,460 கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு இதுவரை, 28.50 கோடிக்கும் அதிகமான (28,50,99,130) கரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,63,28,045 தடுப்பூசிகள் (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமாா் 2.87 கோடி (2,87,71,085) கரோனா தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் 52,26,460 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.