புது தில்லி: எரிசக்தி சிக்கனம் மற்றும் குறைந்த கரியமில வாயு வெளிப்பாடு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த அனைத்து துறை சாா்ந்த குழு ஒன்று அமைக்கப்படும் என்று மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்துள்ளாா்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கான தயாா்நிலை மற்றும் பல்வேறு எரிசக்தி சிக்கன திட்டங்கள் குறித்த உயா்நிலைக் கூட்டம் மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் தலைமையில் காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த உயா்நிலைக் கூட்டம் குறித்து மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அனைத்து துறைகளிலும் எரிசக்தி சிக்கனம் மற்றும் குறைவான கரியமில வாயு வெளிப்பாடு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இந்த உயா்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன. இதை மேலும் அதிகப்படுத்த சாத்தியமுள்ள துறைகளை அடையாளம் காண விரிவான செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றாா்.
மேலும், நாடு முழுவதும் எரிசக்தி சிக்கனம் மற்றும் குறைந்த கரியமில வாயு தொழில்நுட்பத்தை திறம்பட நடைமுறைப்படுத்த தொடா்புடைய அனைத்து அமைச்சகங்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்று கூறினாா்.
கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றக் கூடிய போக்குவரத்துத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எரிசக்தி வீணாவது குறைக்கப்படுவதோடு, குறைந்த காா்பன் தொழில்நுட்பங்கள் மிகப் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை அனைத்து துறைகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று உயா்நிலை கூட்டத்தில் மத்திய அமைச்சா் ஆலோசனை தெரிவித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.