புது தில்லி: ஐஓபி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளை தனியார்களுக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1937}இல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஐஓபி தொடக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 1,500}க்கும் மேற்பட்ட கிளைகளோடு செயல்பட்டு வருகிறது. அதுபோன்று சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவும் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்போதைய மத்திய அரசு, வங்கிகள் இணைப்பு என தொடங்கி சில வங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்தது. தற்போது பெரிய வங்கிகள் தனியார் மயமாக்கப்படுகின்றன. வங்கிகளின் வரவு}செலவு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சில தனி நபர்களிடம் ஒப்படைப்பது மக்களை தனியாரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளும்.
காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் முயற்சியால் தனியார் வங்கிகள் தேச உடைமையாகின. ஆனால், இன்று மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, எதிர்மறையாக மீண்டும் தனியார் மயமாக்கி தேசத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுடன் இந்த வங்கிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த வங்கிகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.