மக்களுக்கு தேவைப்படுவது விரைவான மற்றும் உடனடி தடுப்பூசியே அன்றி பாஜகவின் பொய்கள் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “மக்களுக்கு தற்போது தேவைப்படுவது விரைவான மற்றும் உடனடி தடுப்பூசியே. அதனை மறைக்க பாஜகவினர் தெரிவிக்கும் பொய் பிரசாரங்கள் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடியின் பிம்பத்தைக் காப்பாற்ற மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து மக்கள் மரணமடைந்து வருகின்றனர்” என விமர்சித்துள்ளார்.