ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,861 ஆக நீடிக்கிறது. இதில் 6,491 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது.
கரோனா 2-ம் அலையில் ஏப்ரல் தொடக்கத்தின்போது தாராவிப் பகுதி ஹாட்ஸ்பாட்டாக இருந்தது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 99 ஆகப் பதிவானது.
தாராவியில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக நேற்று (திங்கள்கிழமை) ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.