நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியது:
"கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதைக் கண்டு மேற்கொண்ட ஆய்வில் தினசரி கரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது. இது மிகப் பெரிய முன்னேற்றம். இருப்பினும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
கடந்த சில நாள்களாக நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 10-ம் தேதி நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை சராசரியாக 37.45 லட்சமாக இருந்தது. தற்போது அது 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 2.9 சதவிகிதம்.
கரோனா பாதிப்புகளைவிட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 95.6 சதவிகிதத்தை அடைந்துள்ளது."
நாட்டில் கடந்த மே 7-ம் தேதி அதிகபட்சமாக 4.14 லட்ச பாதிப்புகள் பதிவாகின. அதன்பிறகு மே 19-ம் தேதி தினசரி பாதிப்பு 2.67 லட்சமாகக் குறைந்து பதிவானது. இதுவே கடந்த 24 மணி நேரத்தில் 86,490 ஆக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.