நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 39.2 லட்சம் கரோனா தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் இதுவரை மொத்தமாக 25 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஜூன் 14-ம் தேதியுடன் இதுவரை தொடர்ந்து 150-வது நாளாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 39.2 லட்சம் (39,27,154) கரோனா தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 34.82 லட்சம்பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4.4 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 25 கோடிக்கும் (25,90,44,072) அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1.40 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.