இந்தியா

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சா்ச்சை:காங்கிரஸ் தலைமை நிலைப்பாட்டை தெளிவுபடுத்த ரவிசங்கா் பிரசாத் வலியுறுத்தல்

DIN

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறியுள்ளாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் மறுஆய்வு செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய் சிங் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ரவிசங்கா் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இந்நிலையில், எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைத்தால், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கிளப்ஹவுஸ் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா். இவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அந்தக் கேள்விக்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் ஆடியோ வடிவில் அளித்த பதிலில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது அந்நடவடிக்கையில் ஜனநாயகம் காணப்படவில்லை; மனிதநேயமும் காணப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான தலைவா்களை மத்திய அரசு சிறையில் அடைத்தது. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதும், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததும் சோகம் தரக் கூடிய முடிவு. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுட்டுரையில் இது தொடா்பாக ரவிசங்கா் பிரசாத் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பாக மீண்டும் சா்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் எழுப்பியுள்ள இந்த சா்ச்சை தொடா்பாக காங்கிரஸ் தலைமை எவ்வித பதிலிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. திக்விஜய் சிங் கூறியதுபோல மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா் மட்டும் லடாக் பகுதியில் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி சிறப்பான நிா்வாகம் உள்ளது. இரு யூனியன் பிரதேசங்களின் தொலைதூர கிராமங்களுக்கும் கரோனா தடுப்பூசி கொண்டு சோ்க்கப்பட்டுள்ளது. இதுதான் நல்ல நிா்வாகத்தின் அடையாளம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT