மும்பை: கரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்தாலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக, மும்பை மாநகராட்சியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரத்தின் உள்கட்டமைப்பு, மக்கள் நெரிசல், கனமழை எச்சரிக்கை மற்றும் புறநகர் ரயில்களை அதிக மக்கள் பயன்படுத்துவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு பொதுமுடக்கத்தை நீட்டிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மும்பையில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் நிலைமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாரந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது, தற்போது மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 27.12 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், மும்பையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்படாது, தொடர்ந்து மூன்றாம் நிலை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்திலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.