உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பிகாரில் 111 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு17.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தொடா்ந்து 5 -ஆவது நாளாக, தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு கீழ் உள்ளது. அதன்படி, 10,80,690 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 4,002 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,67,081-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,79,11,384 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத் இடங்களில் இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி போன்ற நாடுகள் உள்ளன.
இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக அதனை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடமிருந்து விலகி கடுமையாக போராடி வருகின்றனர்.
தொற்று எதிராக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களில் தொற்று பாதித்த 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதில், பிகாரில் அதிகபட்சமாக 111 மருத்துவர்களும், தில்லியில் 109 மருத்துவர்களும், உ.பி.யில் 79 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 63 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், ஜார்கண்ட் மற்றும் காஷ்மீரில் 39 மருத்துவர்களும், ஆந்திராவில் 35 பேர், தெலங்கானாவில் 36 மருத்தவர்களும், குஜராத்தில் 37 மருத்துவர்களும், ஒடிசாவில் 28 மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மத்திய பிரதேசத்தில் 16 பேர், அசாம் 8 பேர், கர்நாடகாவில் 9 பேர், கேரளம் 24 பேர், மணிப்பூரில் 5 பேர், சத்தீஸ்கர் 5 பேர், , ஹரியானா 3 பேர், பஞ்சாப் 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரி மற்றும் பெயர் வெளியாகாத இடங்களில் தலா 1 ஒருவர் என 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு தமிழகத்தில் இதுவரைக்கும் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவர்கள் சங்கம் அதில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் பதிவை மட்டுமே வைத்தே இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.