தில்லியில் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு அதிகபட்ச வேகத்தை நிர்ணயித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தில்லியில் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக வாகனங்களுக்கு அதிகபட்ச வேகத்தை நிர்ணயித்துமாநில போக்குவரத்துக் காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் பயணிக்கும் கார்கள் மற்றும் ஜீப்புகள் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும், குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகளில் 30 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இருசக்கர வாகனங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்திலும், குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகளில் 30 கி.மீ. வேகத்திலும் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய சாலைகள் மற்றும் நெடுங்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்திலும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வேகத்தைக் காட்டிலும் 5 சதவிகிதத்திற்கு மேல் அதிகமான வேகத்தில் பயணித்தால் எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் தொடர்ந்து மேலும் அதீத வேகத்தில் பயணித்தால் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.